தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது. இதில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்வில் மேயர் ஜெகன் பெரியசாமி, “நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு பெரிய தடையாக உள்ளது. அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டால்தான் ஊழலை முற்றிலும் ஒழிக்க முடியும். ஒவ்வொருவரும் நேர்மை, விழிப்புணர்வு மற்றும் கண்ணியத்துடன் சமூக முன்னேற்றத்தில் பங்கெடுக்க வேண்டும்” எனக் கூறி, உறுதிமொழி வாசித்தார்.

அதில், “நான் அனைத்து செயல்களிலும் நேர்மையையும் சட்ட விதிகளையும் பின்பற்றுவேன். இலஞ்சம் வாங்கவோ கொடுக்கவோ மாட்டேன். வெளிப்படைத் தன்மையுடன் பொதுமக்களின் நலனுக்காகச் செயல்படுவேன். எனது நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்தி, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பேன். ஊழல் சம்பவம் ஏதேனும் அறிந்தால் உரிய அதிகார அமைப்பிற்குத் தெரிவிப்பேன்” என்ற உறுதிமொழியை அனைவரும் கூறினர்.

நிகழ்வில் மாநகராட்சி உதவி பொறியாளர் சரவணன், நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் காந்திமதி, நகர்நல அலுவலர் சரோஜா, குழாய் ஆய்வாளர் நிக்ஷன், சுகாதார ஆய்வாளர் நெடுமாறன், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர் ஞானமார்டின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.