தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் நடத்தப்பட்ட 15வது அகில இந்திய அளவிலான கல்லூரி மாணவர் மற்றும் மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி சிறப்பாக நிறைவடைந்தது.

இந்தப் போட்டி தூத்துக்குடி ஜிம்கானா கிளப் விஎன்எம்ஏடி ராமகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து மைதானத்தில் மின்னொளியில் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற்றது. தொடக்க நாளில் போட்டிகளை தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில் சென்னை இந்துஸ்தான் கல்லூரி அணி, பெங்களூரைச் சேர்ந்த ஜெயின் பல்கலைக்கழக அணியை 77–67 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதற்காக வ.உ.சி துறைமுக ஆணைய சுழற்கோப்பையும் ரூ.50,000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

இரண்டாம் இடத்தைப் பெற்ற ஜெயின் பல்கலைக்கழக அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.40,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மூன்றாம் மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில் கேரளா வர்மா கல்லூரி அணி 74–73 என்ற கணக்கில் பெங்களூரு கிரைஸ்ட் பல்கலைக்கழக அணியை வீழ்த்தி மூன்றாமிடத்தைப் பெற்றது.

பெண்கள் பிரிவில் நடைபெற்ற தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சுழற்கோப்பைக்கான லீக் போட்டியில் பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழக அணி, சென்னை எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரி அணியை 69–60 என்ற கணக்கில் வீழ்த்தி முதலிடம் பெற்றது. ஜெயின் பல்கலைக்கழக அணிக்கு ரூ.50,000 பரிசுத் தொகையும் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.

இரண்டாமிடம் பெற்ற எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரி அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.40,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மூன்றாமிடத்தை சென்னை லொயோலா கல்லூரி அணி, நான்காமிடத்தை கேரளா அல்போன்சா கல்லூரி அணி பெற்றன.

போட்டிகளுக்குப் பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட கூடைப்பந்து கழகத் தலைவர் வி.வி.டி. பிரம்மாணந்தம் வரவேற்புரை ஆற்றினார். வ.உ.சி துறைமுக பொறுப்பு ஆணையத் தலைவர் சுஷாந்த்குமார் பிரோகித் சிறப்புரையாற்றி சுழற்கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார். மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் சாகுல் சிராஜிதின் நன்றியுரை ஆற்றினார்.