தூத்துக்குடி மாநகராட்சி 39-வது வார்டு தெப்பக்குளம் பகுதியில் மாநகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் மக்கள் நடைமேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பகுதியில் தெப்பக்குளம் அருள்மிகு மாரியம்மன் கோவில் எதிரே இரண்டு மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்) அமைந்துள்ளன. இவை கோவில் திருவிழாவிற்கு வரக்கூடிய பக்தர்களுக்கும், வழக்கமாக சாமி தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்களுக்கும் இடையூறாக உள்ளன.

எனவே, கோயிலுக்கு எதிரே உள்ள டிரான்ஸ்பார்மர்களை அகற்றி, அந்த இடத்தை பக்தர்களுக்கான வாகன நிறுத்துமிடமாக மாற்றிக் கொடுக்க வேண்டும். மேலும், மின்மாற்றிகளை தெப்பக்குளம் கிழக்கு பகுதியில் மாற்றி அமைக்க வேண்டும் என மதிப்பிற்குரிய மாநகராட்சி மேயர் அவர்களிடம் இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கை நிகழ்வில் இந்துமுன்னணி நிர்வாகிகள் சிவலிங்கம், சிபு, மாதவன், கவி சண்முகம், பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.