ராஜீவ் நகர், P&T காலனி பகுதிகளில் வெள்ளநீர் வெளியேற்ற பணிகள் தீவிரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால், மாநகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்கள் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மீன்வளக் கல்லூரி அருகே உள்ள மழைநீர் வடிகால் கால்வாயை பார்வையிட்ட அமைச்சர், நீர்ப் பிரவாகம் தடைபடுகின்ற பகுதிகளைப் பற்றி அலுவலர்களிடம் விரிவான தகவல்களை கேட்டறிந்தார். அதே சமயம், தூத்துக்குடி மாநகராட்சி 16ஆம் வார்டில் உள்ள ராஜீவ் நகர் 6வது தெரு மற்றும் P&T காலனி 16வது தெரு பகுதிகளிலும் குடியிருப்புகள் வெள்ளநீரால் பாதிக்கப்பட்டுள்ளதை நேரில் ஆய்வு செய்தார்.

உடனடி நடவடிக்கையாக, வ.உ.சி. துறைமுக ஆணையத்திலிருந்து தீயணைப்பு வாகனத்தை அழைத்து வரவழைத்து, தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. மழை தொடரும் சூழலில் எந்தவித அவசர நிலையும் ஏற்படாதபடி அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

குடிமக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.