தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஹௌசிங் போர்டு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளநீர் தேங்கியுள்ள நிலையில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மழைநீர் வெளியேற்ற பணிகள் நடைபெற்று வரும் இடங்களை பார்வையிட்ட அவர், மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகளை வேகப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், தேவையான பகுதிகளில் உடனடியாக கூடுதல் மின் மோட்டார்கள் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினார்.

தண்ணீரை வெளியேற்றும் பணியில் பயன்படுத்தப்படும் மின் மோட்டார்கள் தடையில்லாமல் தொடர்ந்து இயங்க தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குமாறு பொறுப்புக்கூறிய துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜேஷ்கண்ணன், பகுதி கழக செயலாளர் சிவகுமார், மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி, வட்ட செயலாளர் தெய்வேந்திரன், மாவட்ட பிரதிநிதி பூவேஷ்நாதன், அவைத்தலைவர் ராஜசேகர், பொறியாளர் அணி தர்மர், இளைஞரணி பத்மநாபன், வேல்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.