நாம் இந்தியா் கட்சி மாநில தலைவர் என்.பி. ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டுமானப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“மக்கள் தங்கள் வருமானத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு வரிகளை செலுத்தி வருகின்றனர். அந்த வரிகள் அரசின் பொதுப்பணி ஒப்பந்தங்கள் மற்றும் உதவித்தொகைகள் மூலம் மக்களிடையே புழக்கத்தில் வருகிறது. ஆனால் அதிகமான வரிகளும் கட்டணங்களும் காரணமாக பணப்புழக்க மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொழில்கள் நலிவடைந்து, அரசின் வருவாயும் குறைந்துள்ளது.

தங்க விலை உயர்வு காரணமாக மக்கள் அதிகளவில் கடன் பெற்று பற்றாக்குறையை ஈடு செய்கின்றனர். உணவு தயாரிக்கும் பொருட்கள், வீடுகளுக்கான அத்தியாவசிய உபயோகப் பொருட்கள் மற்றும் அன்றாட பயன்பாட்டுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

அதேபோல் தொழிற்கூடங்கள், கடைகள், குடோன்கள், திருமண மண்டபங்கள், பஸ் பயணங்கள் போன்ற சேவைகளுக்கான வரிகளும் அதிகமாக உள்ளன. குறிப்பாக வீடு கட்டுவது மக்களுக்கு அத்தியாவசியமாகிவிட்டது. இதற்காக பயன்படுத்தப்படும் கம்பி, சிமெண்ட், மரம், கூரைத் தகடுகள், பைப்புகள், ஓயிலிங், பெயின்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களுக்கு தற்போது 18% ஜிஎஸ்டி விகிதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விகிதத்தை குறைப்பதன் மூலம் பொதுமக்கள் மற்றும் தொழில் துறைக்கு பெரிதும் நிவாரணம் கிடைக்கும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.