தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 15 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடுவதற்கும், எடப்பாடி தொகுதியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்ப மனுக்கள் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வரும் 23 ஆம் தேதிக்குள் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் சென்னை எம்.ஜி.ஆர் மாளிகையில் விருப்ப மனு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதன்படி, தூத்துக்குடியைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநரணி செயலாளருமான சுதாகர், டூவிபுரத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதனை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். பின்னர், சென்னை அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை அவர் தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்வின்போது, தெற்கு மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், இளைஞரணி துணைச் செயலாளர் டைகர் சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.