கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற சமீபத்திய சம்பவம் தொடர்பாக, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்கள் வழியாக தெரிவித்து விமர்சனம் செய்ததற்காக அவர்கள்மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசியல் சட்டம் மக்கள் அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் மற்றும் விமர்சன உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை வழங்கி இருப்பதை நினைவுபடுத்தி, இதனை மீறி நடவடிக்கை எடுப்பது மக்கள் அடக்குமுறைக்கு ஒப்பானது என மக்கள் நல உரிமை அமைப்பின் அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:
“நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ள விவகாரத்தை முன்னிட்டு ஆளுங்கட்சியைத் தவிர்த்து அப்பாவி மக்கள்மீது வழக்கு பதிவு செய்வது முற்றிலும் தவறு. இது மக்கள் உரிமைகளை மீறும் செயல். பொதுமக்களின் குரலை அடக்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது. நீதிமன்ற விசாரணை நடந்து வரும் நிலையில் அரசியல் அழுத்தம் இல்லாமல் உண்மையான நீதியை நிலைநாட்ட வேண்டும்” என்றார்.

அவர் இந்த நடவடிக்கை குறித்து தீவிர கவலை தெரிவித்ததுடன், மக்கள் மீது பொய் வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.