தூத்துக்குடி முத்துக்குளித்துறை பகுதியில் சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோ மற்றும் அதனுடன் தொடர்புபடுத்தப்பட்ட பரிந்துரை கடிதம் குறித்து திருமதி அஜிதா ஆக்னல் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி தொகுதிக்கான வேட்பாளர் பரிந்துரையாக ஒரு கடிதம் அனுப்பப்பட்டதாக கூறி, அதனை அடிப்படையாகக் கொண்டு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அஜிதா ஆக்னல் தெளிவாக விளக்கம் அளித்து, “இப்படியான எந்த பரிந்துரை கடிதத்தையும் நான் வழங்கவில்லை. என் பெயரை பயன்படுத்தி போலியான கடிதம் உருவாக்கப்பட்டு, திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது. இந்தக் கடிதம் முழுமையாக போலியானது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சமூகத்தில் தன்னுடைய வளர்ச்சியையும், மக்கள் ஆதரவையும் பாதிக்க வேண்டுமென்ற நோக்கில் சிலர் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் போட்டி ஜனநாயக ரீதியில் இருக்க வேண்டும் தவிர, போலியான ஆவணங்கள் மூலம் ஒருவரின் நற்பெயரை குலைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அஜிதா ஆக்னல் அவர்களுக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து, உண்மை நிலையை அறியாமல் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

“நான் எந்தக் கடிதமும் வழங்கவில்லை” என்ற அஜிதா ஆக்னல் வீடியோ வாயிலாக தெரிவித்த விளக்கத்தின் மூலம், பரவி வரும் கடிதம் மற்றும் வீடியோ தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.