தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மழை தொடர்பான எந்தவொரு குறைபாடையும் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 203 0401-ல் எந்த நேரமும் பதிவு செய்யலாம் என்று தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் நீர் தேங்கக்கூடிய பகுதிகள் அனைத்திலும் அதிகாரிகளுடன் இணைந்து நேரடியாக பார்வையிட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மாநகரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஓடைகள் மற்றும் வடிகால்களில் வடிநீர் முழு திறனுடன் சென்று கொண்டிருக்கிறது. மேலும் புறநகர் பகுதிகளிலிருந்து மாநகரக்குள் இதுவரை எந்த மழைநீரும் வராத நிலையில், தற்போது தேங்கியுள்ள மழைநீர் மழை குறைந்தவுடன் படிப்படியாக குறையும் என்றும் தெரிவித்தார்.

மழை பாதிப்புகள் அல்லது அவசர தேவைகள் ஏற்பட்டால் பொதுமக்கள் கட்டணமில்லா எண் – 1800 203 0401 மற்றும் மேயர் அவர்களின் நேரடி தொலைபேசி எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறினார்.

மக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் முழு நேர பணியில் ஈடுபட்டு வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.