தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக உள்ள கீதாஜீவன், கடந்த இரண்டு நாட்களாக தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் கொட்டித் தீர்க்கும் மழையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். மழைநீர் தேங்காதவாறு உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு நேரடி உத்தரவுகளையும் வழங்கி வருகிறார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முன்னெச்சரிக்கை கூட்டத்துக்குப் பிறகு, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கிலும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, பருவமழை தயார்நிலைகள் ஆய்வு செய்யப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் முழுமையான அற்பணிப்போடு பொதுமக்கள் நலனை முன்னிறுத்தி செயல்பட வேண்டும் என்று கீதாஜீவன் வலியுறுத்தினார். ஊராட்சி முதல் நகராட்சி வரை உள்ள குளங்கள் மற்றும் நீர்வழித்தடங்கள் சரியான நிலையிலா என்பதை ஆய்வு செய்யவும், மின்சார வாரியம், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஜேசிபி வாகனங்கள், மணல் மூட்டைகள் உள்ளிட்ட அவசர கால உபகரணங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. வருவாய் துறை அதிகாரிகள் குளங்களின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து, உடைப்பு அபாயத்தைத் தடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சியில் உள்ள 38 பம்பு அறைகள், 58 மோட்டார் பம்புகள் அனைத்தும் தயார்நிலைக்கு கொண்டு வரப்பட்டு பல இடங்களில் தற்போது பயன்பாட்டில் உள்ளன.

கனமழை மற்றும் மிக கனமழை ஏற்பட்டாலும் நிலைமையை சமாளிக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் தற்காலிக முகாம்கள் தயார்நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. மாநில பேரிடர் மீட்பு குழுவும் அவசரநிலை நடவடிக்கைகளுக்கு தயாராக உள்ளது.

கடந்த மாதம் 19, 20 தேதிகளில் 9 செ.மீ. வரை மழை பதிவானபோது, சில தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருந்தாலும், மழை ஓரளவு குறைந்தவுடன் சில மணி நேரங்களில் தண்ணீர் விரைவாக வெளியேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு எந்தவித தாமதமும் இல்லாமல் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், மின் கம்பங்கள், மரங்கள், பழைய கட்டிடங்கள் போன்ற அபாய இடங்களில் நிற்காமல் பாதுகாப்பான இடங்களில் கவனமாக இருக்க வேண்டுமெனவும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். திமுகவினரும் தங்களது பகுதிகளில் மக்களிடமிருந்து வரும் கோரிக்கைகளை உடனடியாக பகிர்ந்து, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கீதாஜீவன் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை சவால்களை சமாளிக்க அனைத்துத் துறைகளும் முழு தயார் நிலையில் உள்ளதாகவும், பொதுமக்கள் நிம்மதியுடன் இருக்கலாம் எனவும் அவர் உறுதியளித்தார்.