தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் திங்கள் கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாற்றம், வரன்முறைப்படுத்தப்பட்ட பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்குதல், தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 387 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, அவர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 24 மனுக்களை பெற்றுக் கொண்டு, அவர்களின் பிரச்சினைகளை கனிவுடன் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உடனடியாக மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.

மேலும், பத்திரிகையாளர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கரை ஆண்டுகளாக மனுக்கள் வழங்கி வரும் நிலையில், அவை இதுவரை நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், உதவி இயக்குநர் சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தில்வேல்முருகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.