தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக நிதின் நவீன் நியமிக்கப்பட்டுள்ளதை கடுமையாக விமர்சித்து, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி. எஸ். முரளிதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: பாஜகவின் தேசிய செயல் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள நிதின் நவீன், பாஜகவின் மூத்த தலைவரும் பீகார் சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினருமான நவீன் பிரசாந்த் கிஷோர் சின்ஹாவின் மகனாவார். இந்த நியமனம் பாஜகவிற்கு குடும்ப அரசியலாக தெரியவில்லையா? என கேள்வி எழுப்பினார்.

ஒவ்வொரு தேர்தல் மேடையிலும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் காங்கிரஸ் கட்சி குடும்ப அரசியல் செய்கிறது என கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் தற்போது தங்கள் கட்சியிலேயே குடும்ப பின்னணியை அடிப்படையாகக் கொண்டு முக்கிய பதவியை வழங்கியிருப்பது பாஜகவின் இரட்டை வேடத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

“காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சட்டம் – பாஜகவுக்கு ஒரு சட்டமா?” என கேள்வி எழுப்பிய முரளிதரன், குடும்ப அரசியலை குறை கூறும் பாஜகவினர், எந்த அடிப்படையில் நிதின் நவீனை தேசிய செயல் தலைவராக நியமித்தனர் என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்றார்.

ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மற்றொரு கண்ணில் வெண்ணை வைத்து மக்களை ஏமாற்ற பாஜக முயற்சிப்பதாகவும், சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதே இந்த நியமனம் மூலம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.