தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இன்று (29.10.2025) வார்டு வாரியாக சிறப்பு குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெற்றன. பொதுமக்கள் பங்கேற்பை உறுதிசெய்து, அவர்களிடமிருந்து நேரடியாக குறைகளை அறிந்து நடவடிக்கை எடுக்கும்வகையில் இக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் வசதி, திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலை மேம்பாடு, பூங்கா பராமரிப்பு, மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் இடம்பெற்றன.

இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி வடக்கு மண்டலம் 3வது வார்டு பகுதியில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களிடமிருந்து குறைகள், கோரிக்கைகள் மற்றும் மனுக்களை நேரடியாக பெற்றனர். பொதுமக்கள் கூறிய ஒவ்வொரு பிரச்சனையும் பதிவு செய்யப்பட்டு, அதற்கான உரிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

இக்கூட்டத்திற்கு 3வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி தலைமை வகித்தார். 3வது வார்டு பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள சாலை, கழிவுநீர் வடிகால், குடிநீர் மற்றும் தெருவிளக்கு தொடர்பான குறைகளை எழுத்துமூலமாக வழங்கினர்.

மாநகராட்சி நிர்வாகம் மக்கள் நலனை மையமாகக் கொண்டு செயல்படுவதாகவும், இதுபோன்ற சிறப்பு குறைதீர்க்கும் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.