தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் (அரசு உதவி பெறும் பள்ளி) பணியாற்றும் ஆசிரியர்கள் மீது கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (30.10.2025) மதியம் சுமார் 12.30 மணியளவில், பள்ளியின் முன்னாள் செயலராக இருந்த ரமேஷ் என்பவர், தன்னுடன் M.S.S. சுரேஷ் மற்றும் சில அடியாட்களுடன் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியர்களை மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பந்தப்பட்ட ரமேஷ், கடந்த 26.10.2025 அன்று நடைபெற்ற காரப்பேட்டை மகமை பொதுக்குழுக் கூட்டத்தில், அவரது தவறான மற்றும் ஒழுங்கற்ற நடவடிக்கைகள் காரணமாக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், அதற்கு 165 மகமை உறுப்பினர்கள் கையொப்பமிட்டிருந்ததாகவும் பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நீக்கப்பட்ட நிலையில் அவர் இன்று பள்ளிக்கு நுழைந்து செயலர் M.G.M. ஆசிரியர்களையும் பணியாளர்களையும் நோக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இதனால் பள்ளியில் கடும் பதற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அவர் செயலராக இருந்த காலத்தில் ஆசிரியர்களை கொடுமையாக நடத்தி, வெயிலில் சாக்கடைத் தண்ணீரை பைப் மூலம் தெளிக்கச் செய்தது உள்ளிட்ட பல மோசமான செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதுமட்டுமின்றி, “ஆசிரியர்கள் தங்கள் மனைவிகளுடன் பேசுவதற்கும் என்னிடம் அனுமதி வாங்க வேண்டும்” என ஆணவமாக கூறியதாகவும் புகார்கள் உள்ளன. தற்போது பதவி ஆசையில் மீண்டும் அதிகாரம் பிடிக்க முயன்று, ஆசிரியர்களை மிரட்டிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தால் 42 ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் தங்களின் உயிர் பாதுகாப்புக்கு அச்சம் அடைந்துள்ளனர். தமிழக அரசு மற்றும் கல்வித்துறை உடனடியாக தலையிட்டு ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பும் உயிர் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.