தூத்துக்குடி, அக். 29, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இன்று (29.10.2025) வார்டு வாரியாக சிறப்பு குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெற்றன. பொதுமக்களின் பங்கேற்பை உறுதிசெய்து, அவர்களிடமிருந்து நேரடியாக குறைகள் மற்றும் தேவைகளை அறிந்து உடனடி தீர்வுகளை எடுக்க மாநகராட்சி சார்பில் இக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி கிழக்கு மண்டலத்தின் 23வது வார்டில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் 23வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் வெங்கட்ராமன், சுகாதார ஆய்வாளர் பிரகதி, வட்ட செயலாளர் சேகர், பகுதி சபை உறுப்பினர்கள் செல்வராஜ், கந்தசாமி, ஞானசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் குடிநீர் வசதி, திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலை மேம்பாடு, பூங்கா பராமரிப்பு, மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன.

நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களது பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து பொறுப்பதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க உறுதியளித்தனர்.

மாநகரின் ஒவ்வொரு வார்டிலும் மக்கள் குறைகளை நேரில் கேட்டறிந்து தீர்வு காணும் இத்தகைய கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.