தூத்துக்குடி மாவட்டம் 333, வ.உ.சி சாலையில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை இன்று (25.09.2025) காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் மாண்புமிகு இளம்பகவத், I.A.S., அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

முதல் விற்பனையை சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி விபாஸ்ரீ M.A., B.Ed., M.Phil பெற்றுக்கொண்டார்.

கைத்தறி நெசவாளர்கள் தயாரிக்கும் தரமான துணி வகைகளை நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்வதன் மூலம் நெசவாளர்களுக்கு நிலையான வேலைவாய்ப்பினை வழங்கி வரும் கோ-ஆப்டெக்ஸ், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15 முதல் ஜனவரி 31 வரை தமிழக அரசு அறிவித்துள்ள 30% சிறப்பு தள்ளுபடி திட்டத்தின் கீழ் தீபாவளி விற்பனையை முன்னெடுத்து வருகிறது.

இந்த விற்பனைக்காக புதிய வடிவமைப்புகளுடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை, திருப்புவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், பருத்திப்புடவைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், சட்டைகள், நைட்டீஸ், திரைச்சீலைகள், மாப்பிள்ளை செட் உள்ளிட்ட ஏராளமான துணிவகைகள் வாடிக்கையாளர்களுக்காக தருவிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நெல்லை மண்டலத்தில் உள்ள 13 விற்பனை நிலையங்களிலும் ரூ.10 கோடி விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டிற்கான இலக்கு ரூ.12 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இரண்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் (வ.உ.சி மற்றும் முத்துநகர்) கடந்த ஆண்டு தீபாவளி காலத்தில் ரூ.1.50 கோடி விற்பனை செய்தன. இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் ரூ.2 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் "மாதாந்திர சேமிப்பு திட்டம்" என்ற சிறப்பு சேமிப்பு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. இதன்படி, வாடிக்கையாளர்கள் 11 மாதங்கள் சந்தா தொகை செலுத்தினால் 12வது மாத சந்தா தொகையை நிறுவனம் வழங்கி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவையான துணிகளை 30% அரசுத் தள்ளுபடியில் பெற்றுக்கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் நா.இராஜேஷ்குமார், திருநெல்வேலி கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் ஆரோக்கியராஜ், அரசு அலுவலர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை விற்பனை நிலைய மேலாளர் S.கணபதி சுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் பிரபு, தாசில்தார் முரளிதரன், உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.