தூத்துக்குடி நகராட்சியாக இருந்த நிலையில், 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி தமிழ்நாட்டின் 10வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையில், முத்தையாபுரம், அத்திமரப்பட்டி, மீளவிட்டான், சங்கரபேரி, தூத்துக்குடி ரூரல் ஆகிய ஐந்து ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, தூத்துக்குடி மாநகராட்சியை தமிழகத்தின் அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி நேரில் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

அதன்பின் சில ஆண்டுகள் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்ற நிலையில், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு 10 ஆண்டுகள் முக்கிய பணிகள் நடைபெறாமல் இருந்தன. 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், ராம்நகர், முத்தம்மாள் காலனி, பிரையண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் திமுக ஆட்சிக்கு வந்ததும், தூத்துக்குடி மாநகராட்சியில் முழுமையான மாற்றத்தை உருவாக்கும் பணிகள் தொடங்கின.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் பகுதிகளில் தரமான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பின்னர் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வி.இ.ரோடு, அண்ணாநகர் மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பேவர் பிளாக் பதிக்கப்பட்டுள்ளது. சில முக்கிய சாலைகள் எண்ட் டூ எண்ட் முறையில் புதுப்பிக்கப்பட்டு, மாசு இல்லாத மாநகரம் உருவாக்கப்பட்டுள்ளது.

மழைநீர் தேக்கம் அதிகமாக இருந்த பகுதிகளில், கால்வாய் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, 11 புதிய மழைநீர் கால்வாய்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பக்கிள் ஓடை உள்ளிட்ட 6 கி.மீ தூரம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, மழைநீர் கடலுக்குச் செல்லும் வழிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 60 வார்டுகளில், பயன்பாட்டில் இருந்த 18,226 தெருவிளக்குகளுக்கு கூடுதலாக, புதிய 2,887 விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலம் தற்போது மொத்தம் 21,759 தெருவிளக்குகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், மழைநீர் ஊருக்குள் புகுவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கோரம்பள்ளம் குளம் நிரம்பி கடலுக்குச் செல்லும் 12 கி.மீ நீளமான வழித்தடம் சீரமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் பழைய பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டதுடன், புதிய பூங்காக்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் 206 பூங்காக்கள் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

மேலும், பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் பகுதிகளில் 420 புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அடுத்த கட்டமாக மேலும் 400 சாலைகள் அமைக்கப்பட உள்ளன. 50 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் மாற்றப்பட்டு, புதிய கருப்பு மற்றும் நீல பைப் லைன்கள் மூலம் குடிநீர் விநியோகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. பழைய பைப் லைன்களில் ஏற்பட்ட கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, தினசரி குடிநீர் விநியோகம் இடையூறு இன்றி நடைபெற்று வருகிறது. அனைத்து 60 வார்டு பகுதிகளிலும் உள்ள கால்வாய்களில் தேங்கிய மணல் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. எதிர்கால மழை பாதிப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் கால்வாய் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. சிறிய குடியிருப்பு பகுதிகளில் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய அனைத்துப் பணிகளுக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு அளித்த நிதி ஒதுக்கீடு, தூத்துக்குடி மாநகராட்சியின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தூத்துக்குடி மாநகராட்சி இன்று முழுமையான மாற்றத்தை நோக்கி முன்னேறி வருகிறது. அவரின் பார்வை, வழிகாட்டுதல், மற்றும் நிதி ஒதுக்கீடு இல்லாமல் இந்த வளர்ச்சி சாத்தியமாகியிருக்காது,” என மாநகராட்சி சார்பில் நன்றியுரை தெரிவிக்கப்பட்டது.