தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும், பள்ளிக்கல்வி இயக்குநர் ஆணையின்படியும், மாவட்ட கலெக்டர் மற்றும் இணை இயக்குநர்கள் ஆலோசனையின்படியும், செங்கல்பட்டு மாவட்ட அளவிலான இலக்கிய மன்றப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழா செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்மா தலைமையில், செங்கல்பட்டு சி.எஸ்.ஐ. கொலம்பஸ் மேல்நிலைப்பள்ளியில் துவக்க விழாவுடன் தொடங்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர், நேர்முக உதவியாளர்கள், பள்ளித் துணை ஆய்வாளர்கள், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர், மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதேபோல் அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அமைப்புக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியவர்களுக்கும், பங்குபெற்ற அலுவலர்களுக்கும் நினைவுப்பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. துவக்க விழாவில் பள்ளித்துணை ஆய்வாளர் அனைவரையும் வரவேற்று, ஒருங்கிணைத்து போட்டிகளை சிறப்பாக நடத்தினார்.

முதன்மை கல்வி அலுவலர் தனது உரையில் பள்ளிக் கல்வித் துறையின் பல்வேறு நலத்திட்டங்களை விளக்கி, வெற்றி பெறும் மாணவர்கள் வெளிநாட்டு கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுவார்கள் என தெரிவித்தார். கலந்து கொண்ட அலுவலர்கள் மாணவர்களுக்கு போட்டி சார்ந்த ஊக்குவிப்பு உரைகளை வழங்கினர்.

தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய மன்ற பேச்சு, கட்டுரை, கதை கூறுதல், கவிதை எழுதுதல் போன்ற போட்டிகளில் 6, 7, 8, 9 ஆம் வகுப்பு மாணவர்கள் 8 வட்டாரங்களில் இருந்து மொத்தம் 192 மாணவர்கள் பங்கேற்றனர். நடுவர்களாகப் பணியாற்றியவர்கள் தமிழ்க் கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் ஆவர்.

பள்ளிக்கல்வி இயக்குநர் ஆணையின்படி, மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள், பயணப் படி, மேலும் நடுவர்களுக்கு மதிப்பூதியம் முதன்மை கல்வி அலுவலரால் வழங்கப்பட்டது.

அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள், வழிகாட்டி ஆசிரியர்கள் மற்றும் நடுவர்களுக்காக மதிய உணவு வழங்கப்பட்டு விழா சிறப்பாக நிறைவடைந்தது.