நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற “கல் கோரி குறித்து மக்கள் கருத்தரங்கம்” என்ற நிகழ்ச்சியை மக்கள் அறப்போர் இயக்கம் ஏற்பாடு செய்தது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய பொதுச்செயலாளர் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் டாக்டர் வி. சுரேஷ் அவர்கள் மீது சில சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல் சம்பவம் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து நேரடியாக மக்கள் அறப்போர் இயக்க அமைப்பாளர் ஜெயராமன், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய தலைவர் டாக்டர் வி. சுரேஷ் ஆகியோரை சந்தித்து கேட்டறிந்ததாக தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் மாநில தலைவர் சாமு காந்தி மற்றும் தமிழக வெற்றிக்கழக தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் எபனேசர் தெரிவித்தனர்.

அவர்களின் அறிக்கையில், “நெல்லை மண்ணில் நடைபெற்ற மக்கள் கருத்தரங்கத்தின் போது சில சமூக விரோதிகள் திட்டமிட்டு டாக்டர் வி. சுரேஷ் அவர்களுக்கு மீதான கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் என்றும், அதிலும் சிலர் வழக்கறிஞர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மக்களுக்காகப் போராடும் போராளிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சமூக விரோதச் செயலை தமிழக முதல்வர் உடனடியாகக் கண்டித்து, சம்பந்தப்பட்டவர்களை கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குற்றவாளிகள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த தாக்குதலை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும். குற்றவாளிகள் எந்த விதத்திலும் தப்பிக்க விடக்கூடாது,” என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இச்சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்த தமிழ்நாடு மக்கள் நல இயக்கமும் மற்றும் தமிழக வெற்றிக்கழகமும், “மக்கள் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் நபர்களைத் தாக்கும் இப்படிப்பட்ட செயல்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவை. தமிழக முதல்வர் தக்க நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்டுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளன.