தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாமில் காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு 750 பொதுமக்களுக்கு திட்ட பயனாளர் அட்டைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் கீதாஜீவன் கூறியதாவது “திமுக ஆட்சியில் எல்லோரும் எல்லா நன்மைகளும் பெற வேண்டும் என்ற அடிப்படை கொள்கையுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்களுக்காக உழைத்து வருகிறார். உலக அளவிலேயே ‘திராவிட மாடல் ஆட்சி’ இன்று முன்மாதிரியாக பார்க்கப்படுகிறது.

மக்கள் அனைவரும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன் பெற வேண்டும் என்பதில் அரசு மிகுந்த அக்கறை காட்டுகிறது. ஏற்கனவே அட்டைகள் பெற்றவர்கள் புதுப்பித்துக் கொள்ளவும், புதியவர்கள் விண்ணப்பித்து அடையாள அட்டை பெறவும் முகாம்கள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தை அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மக்களின் குறைகளை என்னிடம் நேரடியாக சொல்லுங்கள் — ஆனால் நிறைவான பணிகளை மற்றவரிடம் கூறுங்கள்! எந்த நேரத்திலும் உங்களுக்காக உதவ தயாராக வடக்கு மாவட்ட திமுக இருக்கிறது. மக்களுக்கு தேவையான சேவைகள் தொடர்ச்சியாக நடைபெறும்.” என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மணி, அல்பட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.