தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிநாதர் பெருமாள் திருக்கோவிலுக்குச் சொந்தமான புல எண் 974/2–ல் உள்ள சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 சென்ட் நிலம், ஆழ்வார் திருநகரி திமுக பிரமுகர் மற்றும் அவரது உறவினரான ஜெகதீஷ் ஆகியோர் மூலம் அத்துமீறி கட்டிடங்கள் எழுப்பி ஆக்கிரமிக்கப்பட முயற்சிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சட்டவிரோத நடவடிக்கை குறித்து கோவில் செயல் அலுவலர் காவல்துறையில் புகார் அளித்தும், இதுவரை வழக்குப் பதிவு அல்லது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பதால், கோவில் சொத்துகளை பாதுகாக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் மற்றும் பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் சேர்ந்து ஸ்ரீவைகுண்டம் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சென்று புகார் மனு அளித்தனர்.

இந்த நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர் முத்துராமலிங்கம், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் D.ராஜா, ஸ்ரீவைகுண்டம் மண்டல தலைவர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின் அவர்கள் தெரிவித்ததில், “கோவில் சொத்துகளை பாதுகாப்பதில் பாஜக எப்போதும் முன்னிலையாக இருக்கும். கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் யாரையும் சட்டம் விடமாட்டாது. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்” என்று தெரிவித்தனர்.