தூத்துக்குடி தூய இஞ்ஞாசியர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமை படை சார்பாக பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கவும், துணிப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கவும் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.

நிகழ்வில் பசுமை படை மாணவர் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பொறுப்பாசிரியர் ராஜகுமார் அனைவரையும் வரவேற்று, பசுமை பாதுகாப்பில் மாணவர்கள் வகிக்கும் பங்கை விளக்கினார்.

தலைமை ஆசிரியர் சேசு அந்தோணி, பிளாஸ்டிக் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை எடுத்துக்கூறி, துணிப்பையின் முக்கியத்துவத்தை விளக்கினார். தொடர்ந்து ஆசிரியர் ஜெயிலின், “நாம் ஏன் துணிப்பை பயன்படுத்த வேண்டும்?” என்ற தலைப்பில் மாணவர்களிடம் சுவாரஸ்யமாக கருத்துரையாற்றினார்.

இந்நிகழ்வில் அனைவரும் “பிளாஸ்டிக் அல்ல… துணிப்பையே பயன்படுத்துவோம்!” என உறுதிமொழி மேற்கொண்டனர். நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.