தூத்துக்குடி லயன்ஸ்டவுன் 47வது வார்டில் பல தலைமுறைகளாக வசித்து வரும் 55 மீனவக் குடும்பங்கள் தங்கள் குடியிருப்புகள் மீது உருவான சிக்கல் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

சுமார் 3 ஏக்கர் 14 சென்ட் பரப்பளவு கொண்ட இந்த நிலப்பகுதி, 1950களில் மத்திய அரசின் உப்பு இலாக்காவுக்குச் சொந்தமானதாக இருந்தது. பின்னர் குத்தகை அடிப்படையில் கைத்தான் வில்லவராயர் பயன்படுத்தி வந்த நிலையில், அவரது மகன் சூசையா வில்லவராயர் மீனவ மக்களின் எதிர்காலத்தை கருதி அந்த நிலங்களை நன்கொடையாக வழங்கியதாக கூறப்படுகிறது.

அதன்பின் மக்கள் தங்கள் சொந்த செலவில் வீடுகள் கட்டி குடியேறி, மாநகராட்சி வழங்கிய மின், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பெற்றுள்ளனர். தொடர்ந்து வீட்டு வரி, நிலவரி, குடிநீர் வரி போன்ற வரிகளைச் செலுத்தி, அரசு வழங்கிய பட்டா, பாஸ்புக், ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் பெற்றுள்ளனர்.

ஆனால், இந்நிலங்களில் ராஜாராம் எனும் நபர் போலியான ஆவணங்களை தயாரித்து, 1987ஆம் ஆண்டு பிளாட் அப்ரூவல் பெற்றுத் 31 பிளாட்களை உருவாக்கி, அதில் 28 பிளாட்களை விற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மீதமுள்ள 3 பிளாட்களுக்கு பாதை இல்லாததால், மீனவர்கள் வசிக்கும் வீடுகள் ரோட்டை ஆக்கிரமித்துள்ளன என்ற முறையில் பல்வேறு நீதிமன்ற வழக்குகளைத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில், 2021ம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை உத்தரவை வழங்கிய நிலையில், சமீபத்தில் தூத்துக்குடி மாநகராட்சி ராஜாராமுக்கு ஆதரவான முறையில், மீனவர்கள் பெற்ற பட்டா, பாஸ்புக் ஆகியவற்றை ரத்து செய்ய வட்டாட்சியருக்கு கடிதம் எழுதியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் எங்கள் வாழ்வாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்தும் மாநகராட்சியின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். போலியான ஆவணங்களை வைத்து நிலம் விற்றவரின் பத்திரப் பதிவு ஆவணங்களை உடனடியாக விசாரிக்க வேண்டும்” என மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு இந்த மனுவை சமர்ப்பித்தனர்.