கரூர் மாவட்டத்தில் 26.09.2025 அன்று நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் “இரண்டாம் ஜாலியன் வாலாபாத் படுகொலை” எனக் குறிப்பிடப்பட்டு, சம்பவத்துக்குக் காரணமான அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தலைமை நீதிபதிக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

சீட்டா நிறுவனரும், அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையத்தின் சேர்மேன் பி. பாபு @ லஞ்ச ஒழிப்பு பாபு எழுதிய கடிதத்தில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறை நிர்வாகம், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வருவாய் நிர்வாகம், மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் உள்ளிட்டோர் மீது தமிழக அரசு இன்னும் வழக்கு பதிவு செய்யாததும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காததும், பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசின் மீது நம்பிக்கை குறைவடையச் செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சம்பவத்துக்குப் பின் ஒரு நபர் விசாரணை ஆணையம் மட்டுமே அமைக்கப்பட்டிருப்பதையும், அதிலும் முன்னர் ஆளும் கட்சியின் மக்கள் பிரதிநிதியாக இருந்த நபர் தான் ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பது விசாரணையை அரசு திட்டமிட்டு இருட்டடிக்கப் போவதாக மக்கள் சந்தேகம் கொள்கின்றனர் எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, சமூக வலைதளங்களில் இந்த படுகொலை குறித்து கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த தமிழக அரசின் நடவடிக்கையை “மக்களின் உரிமையை அடக்கும் செயல்” எனவும் பாபு கடிதத்தில் கண்டித்துள்ளார்.

எனவே, முதல் கட்டமாக சம்பவத்துக்குக் காரணமான அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இரண்டாம் கட்டமாக கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் எனவும், உரிய சட்ட நெறிமுறைகளுடன் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு வழிகாட்டு உத்தரவு வழங்குமாறு உயர்நீதிமன்றம் மதுரை கிளையிடம் பி. பாபு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு, தமிழக அரசின் நிர்வாகத் திறன் மற்றும் மக்களிடையே நீதி குறித்த நம்பிக்கை மீண்டும் நிலை நிறுத்தப்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.