பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சமுதாய பணிகள், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் நிலைமை, அரசியல் பங்களிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த மாநில, தென்மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் திருநெல்வேலியில் நடைபெற்றது.

தனியார் மஹாலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இயக்கத் தலைவர் இசக்கிராஜா தேவர் உரையாற்றியபோது, அவர் கூறியதாவது: “இந்திய இராணுவத்தில் தமிழர்களின் வீர வரலாற்றுச் சின்னமான மறவர் ரெஜிமெண்ட் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். நம்மை உயர்த்திப் பிடிக்கும் சக்திகளை நாம் ஆதரிக்க வேண்டும். கொள்கை உறுதியுடன், சமுதாய ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

கவின் கொலை வழக்கில் தவறாக சிறைபிடிக்கப்பட்ட சரவணனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். சூர்ஜித் தாய்மீது வைக்கப்பட்ட பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும்.

சிவகங்கை இளமனூரில் தேவர் சமூகத்தினர்மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். காவல்துறையின் ஒருதலைப்பட்ச செயல்பாடுகளை எதிர்க்கப்பட்டது.

வீர மரபின் சின்னமான மறவர் ரெஜிமெண்ட்டை மீண்டும் உருவாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளர் & சீர்மரபினர் பள்ளிகளின் பெயர் மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும். “முன்னோர் பெயர்களை நீக்குவது சாதிப்பெயர் அல்ல, வரலாற்றை அழிப்பது” என தீர்மானம்.

டிஎன்டி ஒற்றைச் சான்றிதழ் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக வழங்கப்பட வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, தேவர் இனத்திற்கான கூடுதல் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தேவர் அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

திருநெல்வேலியில் புலித்தேவர், வேலுநாச்சியார், ராஜராஜசோழன், மருது பாண்டியர் சிலைகளை ஒரே நினைவிடமாக அமைக்க வேண்டும்.

எஸ்.சி/எஸ்.டி சட்டத்தை தனிப்பட்ட பழிவாங்கலுக்காக பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்; அடிப்படை விசாரணை இல்லாமல் கைது செய்யக்கூடாது; பொய் வழக்கு போடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும்.

2026 தேர்தலில் எங்கள் கோரிக்கைகளை மதிக்கும் வேட்பாளர்களுக்கு மட்டுமே ஆதரவு. “துரோகிகளுக்கு சமூகத்தால் பாடம் புகட்டப்படும்” என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், விருதுநகர், தேனி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பூர், சென்னை, கோவை, சிவகங்கை, திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.