தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் தாக்கம் காரணமாக நீதிமன்ற வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி, குளம் போல் காட்சி அளித்தது. நீதிமன்றம் நோக்கி வந்த வழக்கறிஞர்கள், வழக்குத் தரப்பினர் மற்றும் பொதுமக்கள் நீரில் நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மழைநீர் பெருமளவில் தேங்கி, நடைபாதைகள் மற்றும் நுழைவு வாயில்கள் முழுமையாக நீரில் மூழ்கியதால், பலர் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாமல் வெளியேவே நின்று தவித்தனர். நீதிமன்ற பணிகளும் தாமதமானது.

“ஒவ்வொரு மழைக்கும் இதே நிலைதான். உடனடியாக நீர்நீர் வடிகால் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியது அவசியம்” என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். பொதுமக்களும், “நீதிமன்றம் போன்ற முக்கிய இடம் இவ்வாறு பாதிக்கப்படுவது மிகவும் வருத்தமானது; உடனடி நடவடிக்கை அவசியம்” எனக் கோரிக்கை விடுத்தனர்.

மழைநீர் வடிகால் வசதி குறைவாக இருப்பதே இதற்குக் காரணம் என பொதுமக்கள் குறைகூறி, நிர்வாகம் விரைந்து செயல்பட்டு இதுபோன்ற சூழல் மீண்டும் ஏற்படாத வகையில் நிரந்தர தீர்வு கண்டு செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.