தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்துக்குட்பட்ட சந்திரகிரி – கொல்லம்பரம்பு கிராமத்திற்கு அருகே செயல்பட்டு வரும் KKM கல்குவாரி மற்றும் எம்–சாண்ட் தயாரிப்பு மையம் சுற்றுவட்டார மக்களின் வாழ்வும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதோடு, கிராமச் சாலைகளை முழுமையாக சேதப்படுத்தி விட்டதாக தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் மாநில தலைவர் சாமு காந்தி அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை வழங்கியுள்ளார்.

மனுவில் அவர் குறிப்பிட்டதாவது:
2022ஆம் ஆண்டு பிரதமர் மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் வீரபாண்டியபுரம், முத்துக்குமாராபுரம், குளத்தூர், கொல்லம்பரம்பு, சந்திரகிரி பகுதிகளில் புதிய சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலை 2027ஆம் ஆண்டு வரை ஒப்பந்தக்காரரால் பராமரிக்கப்பட வேண்டும் என திட்ட விதிமுறைகளில் தெளிவாக கூறப்பட்டிருந்தும், இதுவரை பராமரிப்பு செய்யப்படவில்லை.

இந்நிலையில், KKM கல்குவாரியில் இருந்து தினமும் 30 டன் முதல் 60 டன் வரை அதிகப் பாரம் ஏற்றிய கனரக வாகனங்கள் இந்த கிராமச் சாலைகளில் இயங்குகின்றன. அரசால் நிர்ணயிக்கப்பட்ட எடையைவிட பல மடங்கு அதிகமாக ஏற்றிச் செல்லப்படும் சரக்கு காரணமாக வீரபாண்டியபுரம், முள்ளூர், குளத்தூர், கொல்லம்பரம்பு, சந்திரகிரி ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. கடந்த இரண்டு வருடங்களுக்குள் புதிதாக அமைக்கப்பட்ட சாலை முழுவதும் உடைந்து புழுதியாகி விட்டது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கல்குவாரியில் அனுமதிக்கப்பட்ட ஆழத்தைக் கடந்தும் வெடி மருந்து பயன்படுத்தி கல் வெட்டப்படுகிறது.

இது சுற்றுச்சூழல், குடியிருப்பு பகுதிகள் மற்றும் கிராம மக்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது குளத்தூர் காவல்துறையால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சாமு காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

அதனால், KKM கல்குவாரியின் செயல்பாட்டை அரசு சட்ட, விதிமுறைகளுக்கு உட்படுத்துதல் அல்லது தேவையானால் மூடுதல்,

அதிக எடையில் இயங்கும் வாகனங்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தல்,

முற்றிலும் சேதமடைந்த கிராமச் சாலைகளை மறுபடியும் புதிதாக அமைத்தல்,

ஒப்பந்தக்காரர் மீது தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுதல்

ஆகியவற்றை தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் சார்பில் அவர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனுவை மாநில தலைவர் சாமு காந்தி (தொலைபேசி: 94430 78910) வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.