தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய கடலோரப் பகுதியில் கப்பல் கட்டும் விரிவாக்கத் தளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் பாரம்பரிய உப்பளங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், முள்ளக்காடு, முத்தையாபுரம், புல்லாவழி, பழையகாயல் உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து பல்வேறு கட்டங்களில் கண்டனப் போராட்டங்களை நடத்தினர்.

அந்தப் போராட்டங்களின்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் பேசுகையில், “மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு முழு ஆதரவாக அதிமுக துணை நிற்கும். உங்கள் கோரிக்கையை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரில் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று உறுதி அளித்திருந்தார்.

அதன்படி, இன்று சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் சேகர் (செயலாளர்), மந்திரமூர்த்தி, பொன்ராஜ், சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், சிவாகர், கணேஷ்நகர் சுயம்பு நாடார், பாலசுப்பிரமணியன், ஈபால், பொன்ராம், பிரபாகர், பாரத், ராமர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் சேலம் மாவட்டம் எடப்பாடி நெடுஞ்சாலை நகரில் உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.

அப்போது, உப்பு உற்பத்தியாளர்களிடம் பேசுகையில் எடப்பாடி பழனிச்சாமி,
“இது குறித்து மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் தகவல் அளித்துள்ளார். விஷயத்தை நான் கவனத்தில் கொண்டு பார்த்துக் கொள்கிறேன்,” என்று உறுதியளித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்தச் சந்திப்பில் தூத்துக்குடி மாநகர தெற்கு பகுதி அதிமுக செயலாளர் சுடலைமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.