தூத்துக்குடியில் டி.எஸ்.எப் அணியைச் சேர்ந்த முன்னாள் லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்ஸன், நேற்று மாலை நிருபர்களை சந்தித்து நாசரேத் திருமண்டல தேர்தல் தொடர்பாக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

திருமண்டல தேர்தல் முறையாகவும், விதிகளுக்குட்பட்டவாறும் நடைபெறவில்லை என்றும், திருமண்டல மூலச் சட்டத்தை முழுமையாக மீறியே தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தேர்தலை நடத்த நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி, நடுநிலையாக செயல்படாமல், ஒரு குறிப்பிட்ட அணியான எஸ்.டி.கே அணிக்கு ஆதரவாகவே செயல்பட்டதாக குற்றம்சாட்டினார்.

ஓட்டுகள் இல்லாத நிலையிலேயே எஸ்.டி.கே ராஜனுக்கு பள்ளிகளின் மேலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதாகவும், இரண்டு அணியையும் சமமாகக் கருதி, தற்போதைய நிர்வாக அணியுடன் இணைந்து தேர்தல் நடத்த வேண்டிய நிலையில், அது பின்பற்றப்படவில்லை என்றும் கிப்ட்ஸன் தெரிவித்தார்.

மேலும், அதிகார வரம்பு இல்லாதபோதும் சில குருவானவர்களை பதவி நீக்கம் செய்துள்ளதாகவும், இதனால் திருமண்டல மக்களுக்கு தேவையற்ற குழப்பமும் அவலமும் உருவாகியுள்ளதாகவும் கூறினார். பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் தொடர்பான முறைகேடுகளை எடுத்துரைக்க முயன்றபோது, நீதிபதி ஜோதிமணியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், செல்போன் மூலம் தொடர்பு கொண்டால் கூட அவர் அழைப்புகளை ஏற்கவில்லை என்றும் கிப்ட்ஸன் கூறினார். “தவறுகளை தெரிவிக்க யாரிடம் செல்ல வேண்டும்? அவரிடமே செல்ல முடியாவிட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்?” என அவர் வேதனையுடன் கேள்வி எழுப்பினார்.

இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி இருந்த நிலையில், நான்கு அல்லது ஐந்து ஓட்டுகளால் மட்டுமே வெற்றி தீர்மானிக்கப்படும் சூழலில், பல பாஸ்ட்ரேட்களில் புதிதாக ஓட்டுகள் சேர்க்கப்பட்டும், சில ஓட்டுகள் நீக்கப்பட்டும் எதிரணி வெற்றி பெற்றதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதன் காரணமாக தங்கள் அணியைச் சேர்ந்த சுமார் 25 முதல் 30 டி.சி. உறுப்பினர்களின் வெற்றி பறிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதுபோன்ற முறைகேடான தேர்தல் திருமண்டல வரலாற்றில் இதற்கு முன்பு நடந்ததே இல்லை என்றும், தற்போது தங்களுக்கான நீதியும் வெற்றியும் கடவுள் மட்டுமே வழங்க முடியும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் கிப்ட்ஸன் கூறினார். இறுதி கட்டத்தில் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு, கடைசி நேரத்தில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

இந்த நிருபர் சந்திப்பின்போது இம்மானுவேல் வான்ஸ்றக், எஸ்.டி.ஆர். விஜய சீலன், ஜெயக்குமார் ரூபன், டேவிட்ராஜ், ஜெபக்குமார் ஜாலி, எமில்சிங், மோசஸ், எமர்சன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.