உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, உலகின் முதலாவது உள்ளரங்கு பிரான்சைஸ் சிட்டிங் கிரிக்கெட் டூர்னமென்ட் தூத்துக்குடி கோமதிபாய் காலாணி உள்விளையாட்டு அரங்கில் மாநில சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது.

தமிழகத்தின் முன்னணி சிட்டிங் கிரிக்கெட் வீரர்கள் எட்டு அணிகளாக ஏல முறையில் தேர்வு செய்யப்பட்டு, சம பலத்துடன் புகழ்பெற்ற போட்டியில் மோதினர். உலகில் இதுவே முதல்முறையாக நடைபெறும் இந்த சிறப்பு தொடரை டிரையம்ப் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் உலக சாதனையாக அங்கீகரித்தது.

உலக சாதனை சான்றிதழ்களை வீரர்களுக்கு வழங்கிய அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது: “விளையாட்டு துறையை பொறுப்பேற்ற நாள் முதலே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முயற்சியால் தமிழக வீரர்கள் உலகளவில் சாதனைகள் படைத்து வருகிறார்கள். அரசின் ஊக்கமும், தரமான பயிற்சியும் தான் இவ்வளவு பெரிய சாதனைகளுக்கு காரணம். உங்களுக்குத் தேவையான எந்த உதவியும் வழங்க நான் தயாராக உள்ளேன். தொடர்ந்து பல சாதனைகள் நிகழ வேண்டுமென வாழ்த்துகிறேன்” என்றார்.

போட்டிக்கான ஏற்பாடுகளை டாக்டர் மகிழ்ஜான் ஒருங்கிணைத்திருந்தார். பல்வேறு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வில் பங்கேற்றனர்.