கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மீன்பிடித் துறைமுக மைதானத்தில் உலக மீனவர் நாளை முன்னிட்டு கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்புகள் சார்பில் இன்று (21.11.2025) சிறப்பாக விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு உரையாற்றினார். கடல் வளத்தை பாதுகாப்பதும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் அரசின் முதன்மை நோக்கமாக திகழ்வதாக அவர் தெரிவித்தார். மீனவர்களின் உரிமைகள், பாதுகாப்பு, கல்வி, நலத் திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார்.

விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சரும் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான மனோ தங்கராஜ், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் நாகர்கோவில் மேயருமான ரெ. மகேஷ், தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் J.G. பிரின்ஸ், கில்லியூர் MLA ராஜேஷ்குமார், விளவங்கோடு MLA தாரகை கத்பர்ட், திமுக மாநில மீனவர் அணி அமைப்பாளர் ஏ.ஜே. ஸ்டாலின், சத்யபாமா பல்கலைக்கழக நிர்வாக இயக்குநர் Dr. மரியஜீனா ஜான்சன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மீனவர்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு குமரி மாவட்டத்தில் நடைபெறும் திட்டங்கள், கடல்சார் பாதுகாப்பு, மீனவர்களின் நலத்திட்டங்கள் ஆகியவை குறித்து விழாவில் பேசப்பட்டன.

குளச்சல் துறைமுகம் முழுவதும் விழாவை முன்னிட்டு திரண்ட மீனவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் உற்சாக பங்கேற்பால் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.