தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டில் நிலவும் முக்கிய பொதுப் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, திமுக கவுன்சிலர் சரவணக்குமார் இன்று காலை மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற மாதாந்திர பொதுக்கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமியிடம் மனு வழங்கினார்.

இந்த மனுவில், வார்டிற்கு உட்பட்ட மூன்று இடங்களில், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ஈமக்கரிகை நீர் மாலை எடுப்பதற்கான வசதியாக, அடி பாம்பு குழாய் அல்லது சிறிய கிணறு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

கணேசன் காலனி 1-வது தெருவில், தொடர்ந்து மழை நீர் தேங்கி, மக்கள் அவதிப்படுவதால், 100 மீட்டர் நீளத்தில் சிறிய வடிகால் அமைத்து, நீர் தேக்கத்தை நீக்கும் நடவடிக்கை அவசரமாக எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சாந்தி நகர் 4-வது தெருவில், பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலை இன்னும் சீரமைக்கப்படாததால், அதை உடனடியாக சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து தர வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டது.

கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

50-வது வார்டு மக்களின் நலனுக்காக முக்கிய தேவைகளை முன்வைத்த கவுன்சிலர் சரவணக்குமாரின் கோரிக்கைகள் கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டன.