தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் மழைநீர் தேக்கம் உள்ளிட்ட குறைகளை முன்வைத்தபோது, மேயர் ஜெகன் பெரியசாமி தெளிவான எண்களுடன் பதிலடி கொடுத்தார்.

“அதிமுக ஆட்சியில் மூன்றே வழித்தடம்… ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் பதினொன்று வழித்தடங்கள்! அதனால் தான் 80% பகுதிகளில் நீர் தேங்காமல் மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்” என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், துப்புரவு பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்க ரூ.2.55 கோடி ஒதுக்கீடு, மழைநீர் வெளியேற்ற 38 பம்ப் அறைகள், 58 மின்மோட்டார்கள் செயல்பாடு, 450 காலி மனைகள் உள்ள தாழ்வான பகுதிகள் சீரமைப்பு, 12 கிமீ நீளமுள்ள உப்பாற்று ஓடை வழித் தடம் புனரமைப்பு போன்ற பல்வேறு திட்டங்களை விளக்கினார்.

“கடந்த ஆட்சியில் மழை வந்தால் 40 நாட்கள் தண்ணீர் நின்றதுண்டு… இப்போது 2 மணி நேரத்தில் வடியுகிறது” என்று மேயர் கூறியதும், கூட்டத்தில் இருந்த உறுப்பினர்களிடையே சலசலப்பு எழுந்தது.

பின்னர் எதிர்க்கட்சியினர் பேச்சு நடுவே எழுந்ததால், திமுக உறுப்பினர்களும் எதிர்த்து பேச தொடங்கினர். இதனால் கூட்ட அரங்கில் சற்றே பரபரப்பு ஏற்பட்டது. “யாராவது பேசட்டும்… பதில் உடனே கொடுக்கறதுக்கு நாங்க இருக்கோம்” என்று மேயர் சொல்ல, அரங்கில் சிரிப்பொலி எழுந்தது.

மாடுகள் குறித்து ஒரு உறுப்பினர் “பால் கரக்கும் பசுக்களை பிடிக்காதீர்கள்” என்ற கோரிக்கையை முன்வைத்தபோது,
“மாடு என்றால் எல்லாம் ஒன்றுதான்… ரோட்டில் வந்தால் கன்றும் கூட கோசாலையில்தான்!” என்ற மேயர் பதில் கூட்ட அரங்கையே குதூகலப்படுத்தியது.

மொத்தம் 17 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. புதிய பூங்காக்கள், பாதாள சாக்கடை சீரமைப்பு, பொதுநலத் திட்டங்கள் உள்ளிட்ட பல கோரிக்கைகளும் பெறப்பட்டன.

கூட்டத்தின் இறுதியில், மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் ஆறுமுகம் மற்றும் நூலகம் அமைத்து விருது பெற்ற கவுன்சிலர் சந்திரபோசுக்கு மேயர் வாழ்த்து தெரிவித்தார்.

சலசலப்பு – சிரிப்பொலி – பதிலடி பேச்சு – மக்கள் நல தீர்மானங்கள்…
எல்லாம் கலந்து களைகட்டிய கூட்டம் அனைவரின் ஒப்புதலுடன் நிறைவு பெற்றது.