தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், குளத்தூர் ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ராமச்சந்திராபுரம் கிராம மக்களுக்கு தனியாக ரேஷன் கடை அமைக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில், தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 48 ஊராட்சி ஒன்றியங்களிலும், விளாத்திகுளம் வட்டத்தில் 61 கிராம ஊராட்சிகளிலும் அரசு அதிகாரிகள் தலைமையில் கூட்டங்கள் நடைபெற்றன.

குளத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்னச்சாமி, திமுக பனையூர் பொறுப்பாளர் செல்லப்பாண்டியன், குளத்தூர் காவல்துறை உதவி ஆய்வாளர், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலக உதவி செயற்பொறியாளர், குளத்தூர் மருத்துவமனை டாக்டர், தமிழக வெற்றி கழகத்தின் வடக்கு மாவட்ட செயலாளர் எபநேசர், மக்கள் நல இயக்க மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் பெரியதுரை சின்ராஜ், அதிமுக பொறுப்பாளர் ஜெகநாதன், பாஜக விளாத்திகுளம் ஒன்றிய பொறுப்பாளர் தங்கமாரியப்பன், தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சங்க விளாத்திகுளம் தலைவர் அழகு தங்கம், தொழிலதிபர் பாலா, மக்கள் நல இயக்க மாநில தலைவர் சாமு காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசப்பட்டபோது, ராமச்சந்திராபுரம் கிராம மக்கள் கடந்த நான்கு மாதங்களாக தனி ரேஷன் கடை கோரி போராடி வருவதாகவும், அருகிலுள்ள கெச்சிலாபுரம் ரேஷன் கடையில் சரக்கு பெற முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் அந்த கிராமத்திற்கு தனி ரேஷன் கடை அவசியம் என்பதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் விளாத்திகுளம் வட்டாட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், கடந்த நான்கு மாதங்களாக உணவுப்பொருள் வழங்காத குளத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளரை கண்டித்து, உடனடியாக ராமச்சந்திராபுரம் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல், பாரத பிரதமர் குடிநீர் திட்டத்தில் ஏற்கனவே டெபாசிட் தொகை செலுத்திய 300 குடும்பங்களுக்கு இதுவரை குடிநீர் வழங்கப்படாததால், உடனடியாக வீட்டு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

மேலும், ராமச்சந்திராபுரம் கிராமத்தில் சாலை மற்றும் வாருகால் வசதிகள் உருவாக்கப்பட வேண்டும், வாரம் தோறும் குளத்தூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனை மருத்துவர்கள் கிராமத்தில் தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குளத்தூர் ஊராட்சி செயலாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், கூட்டம் சிறப்பாக நிறைவு பெற்றது.