தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி, அவரது குடும்பத்தினர் பெரும் மனஅழுத்தத்தில் உள்ளனர்.

நாரைக்கிணறு கீழக்காலணி பகுதியைச் சேர்ந்த பொ. சந்தனமாரி, கணவர் கொடியன்குளம் மாரியப்பன் தலைமையிலான குழுவுடன் கடந்த மார்ச் 14, 2025 அன்று மாலி நாட்டிற்கு வேலைக்காக சென்றிருந்தார். அங்கு எட்டு மாதங்களாக பணிபுரிந்து வந்த அவருடன் கடைசியாக நவம்பர் 5, 2025 அன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக அவரது மனைவி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, நவம்பர் 7, 2025 அன்று மாலி நிர்வாகத்திலிருந்து வந்த தகவலின் மூலம், மாரியப்பன் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குடும்பத்தினர் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், அவரது மனைவி சந்தனமாரி, தனது இரு சிறுமிகளுடன் இணைந்து, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அவர்களிடம் மனு அளித்தார்.

அவரது கணவரை விரைவில் மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த ஆட்சியர், சம்பவம் தொடர்பாக அரசுத் துறைகள் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.