மாநகராட்சிக்குட்பட்ட தனசேகரன் நகரில் பல அடுக்கு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. அந்தப் பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கல்விக்கும், மருத்துவத்துறைக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கிறது. ஒன்றிய அரசு ஹிந்தியை கட்டாயப் பாடமாக்க முயற்சி செய்தாலும், தமிழக அரசு மாணவர்களின் நலனை முன்னிலைப்படுத்தி அதனை எதிர்த்து நிற்கிறது.

மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவது, கல்விக்கான மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. எழுத்தறிவோடு பொதுஅறிவும் வளர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் எந்தத் துறையிலும் வெற்றி பெறலாம்,” என்றார்.

மேலும், “தமிழகம் முழுவதும் நூலகங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தூத்துக்குடியில் உருவாகி வரும் இந்தப் புதிய நூலகம், புறநகர் மக்களுக்கான அறிவுக் களமாக இருக்கும்,” என்றும் கூறினார்.

ஆய்வின்போது மாநகராட்சி பணிக்குழுத் தலைவர் கீதா முருகேசன், வட்டச்செயலாளர் ரவீந்திரன், மின்வாரிய தொழிற்சங்கத் தலைவர் பேச்சிமுத்து, மேயரின் உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.