தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலினை அவமதிக்கும் விதமாக அநாகரிகமான வார்த்தைகள் பேசிய பாஜக நிர்வாகிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக வழக்கறிஞர் அணி தூத்துக்குடி ஏஎஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளது.

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் அவர்களின் ஆலோசனைப்படி, மாநகர திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் செல்வி லட்சுமி தலைமையில் இந்த புகார் மனு அளிக்கப்பட்டது.

புகார் மனுவில், கடந்த 3ம் தேதி கோவையில் நடந்த மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டித்து 6ம் தேதி தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் நடைபெற்ற பாஜக மகளிர் அணியின் ஆர்ப்பாட்டத்தின் போது, வட்டக்கோவில் பகுதியை சேர்ந்த பாஜக பிரச்சாரப் பிரிவு மாவட்ட செயலாளர் அனுசியா பேசும்போது, முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலினை நோக்கி பொய்யான, அவதூறான மற்றும் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வன்முறையைத் தூண்டும் வகையிலும், அரசியலுக்கு சம்பந்தமில்லாத குடும்பத்தலைவியை அவமதிக்கும் விதமாக இருந்ததாகவும், அதனை ஊக்குவித்தவர்கள் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்தாரங்கன், மகளிர் அணி தலைவி வெள்ளத்தாய் மற்றும் வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் உமாசெல்வி எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துக்கு எதிராக கடும் கண்டனம்தெரிவித்த மாநகர திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் செல்வி லட்சுமி கூறுகையில், “தமிழக முதலமைச்சர் மனைவி குறித்து அவமதிக்கும் வகையில் பேசியது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசியல் பேச்சுக்கு ஒரு எல்லை இருக்க வேண்டும். இதை கண்டித்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சர் கீதாஜீவன் அவர்களின் ஆலோசனையின்படி விரைவில் போராட்டம் நடத்தப்படும்,” என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபோ. இளம்பதி, மாநகர திமுக துணை செயலாளர் பிரமிளா, மாநகர வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரூபராஜா, வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜா, தொண்டரணி துணை அமைப்பாளர் ஐயம்மாள், மாநகர வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் அமலா ஜெசிந்தா, வழக்கறிஞர்கள் அமுதவல்லி, அனிதா ஆகியோர் உடனிருந்தனர்.