தூத்துக்குடியில் என்.எல்.சி தமிழ்நாடு பவர் லிமிடெட், ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் இன்று காலை 9 மணிக்கு தேவர் காலனி 2வது தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்த முகாமுக்கு என்.எல்.சி தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனத்தின் சி.இ.ஓ அனந்தராமானுஜம் தலைமை வகித்தார். ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி 14வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் கீதா முருகேசன் முகாமை தொடக்கிவைத்தார். முகாமில் கண்புரை நோயாளிகளுக்கான ஆபரேஷன் என்.எல்.சி தமிழ்நாடு பவர் லிமிடெட்டின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாக செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. உள்விழி லென்ஸ் அறுவைசிகிச்சை, தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும், அறுவைசிகிச்சைக்கு பிறகு ஒரு மாதம் கழித்து மேற்கொள்ளப்படும் மறுபரிசோதனையும் இலவசம்.

கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ளிட்ட பார்வை குறைபாடுகளுக்கான கண்ணாடிகள் மற்றும் மருந்துகள் கண் மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் முகாமிடத்திலேயே வழங்கப்பட்டன.

கண்புரை நோயாளிகள் உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் இருப்பின் அருகிலுள்ள பொது மருத்துவரிடம் பரிசோதனை செய்து, தகுதி சான்றிதழ் மற்றும் மருந்துகளுடன் வர வேண்டும் என்றும், அறுவைசிகிச்சை நாளில் சேலை, வேஷ்டி உடன் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பாக பயனடைந்தனர். முகாமை சிறப்பாக ஒருங்கிணைத்த அரவிந்த் கண் மருத்துவமனை பிரதிநிதி கந்தசாமி பாராட்டப்பட்டார்.

இம்முகாமை ஒருங்கிணைப்பதில் ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் மகேஸ்வரி, பாலதீபா அரசி, சொர்ணலட்சுமி, என்.எஸ்.எஸ். கோஆர்டினேட்டர்கள் ஸ்டெல்லாபாக்கியம், புஷ்பகவள்ளி, 14வது வார்டு திமுக இளைஞரணி உறுப்பினர்கள் செல்வ கணேசன், வீரமணி உள்ளிட்ட பலரும் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டனர்.