தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் குளத்துள்வாய்ப்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் பொதுமக்களுக்கு அருகில் உள்ள கிராம பொதுமக்கள் மற்றும் காவல்துறை எஸ்.ஐ. ஆகியோர் இணைந்து தொடர்ந்து பிரச்சினை மற்றும் மிரட்டல் விடுவதாக கூறி இன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்கு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்க கூடிய பொதுமக்கள் மனு அளிக்க திரண்டனர்.

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்ததாவது :-

35 வருட காலமாக அரசு கட்டுப்பாட்டில் குடியிருந்து வருகிறோம். எமது முகாமில் 40 குடும்பங்களாக வசித்து வருகிறோம். கடந்த கால வருடம் தமிழக அரசால் வழங்கப்பட்ட புதிய வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் அரசு எங்களுக்கு புதிய வீடுகளை அமைத்து கொடுத்து எங்களை மகிழ்ச்சியான முறையில் வைத்துள்ளது.

நாங்களும் அருகில் உள்ள மக்களும் 30 வருடங்கள் எவ்வித சண்டைகள் இன்றி சமாதானத்துடன் வாழ்ந்து வந்தோம். அரசு புதிய வீடுகள், சிறப்பான திட்டங்களை எங்களுக்கு செயல்படுத்தி கொடுத்த காரணத்தினால் தொடர்ந்து எங்களுடன் அருகில் உள்ள மக்கள் சண்டைகள் மற்றும் சில தகாத வார்த்தைகளை பேசி வருகின்றனர். உடனே அருகிலுள்ள வட்டாசியரிடம் புகார் தெரிவித்தும் அவர்கள் பலமுறை சமாதானம் செய்தும் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரவில்லை, கடந்த இரு தினங்களுக்கு முன்பு எங்களது முகாமில் உள்ள இளைஞர்களிடம் தகாத வார்த்தைகளை திட்டிய காரணத்தால் அருகில் உள்ள குமாரகிரி நபர் ஒருவரிடம் சண்டை மூண்டுவிட்டது.

அதனைத் தொடர்ந்து ஏற்கனவே எங்களுடன் சண்டையிட்ட குளத்துள்வாய்ப்பட்டி ஊர் மக்களுடன் இணைந்து தூண்டுதலில் ஈடுபட்டு சண்டையிட்டு வருகின்றனர். சண்டையிட்ட நபர்களை காவல் துறையினரிடம் ஒப்படைத்து விட்டோம். அதனைத் தொடர்ந்து அதோடு விடாமல் முகாமிற்குள் புகுந்து அனைவரையும் இரண்டு ஊர் பொதுமக்களும், அந்த ஊரை சார்ந்த ஆண்களும் சேர்ந்து எங்களை தகாத வார்த்தைகளாலும் இழிவுடனும் திட்டி தீர்த்தனர்.

அத்துடன் எமது இளைஞர் ஒருவரை அடித்து தாக்கியுள்ளனர். மேலும் கர்ப்பிணிப் பெண் ஒருவரையும் தள்ளிவிட்டு அவர்களின் கோபத்தை திட்டி தீர்த்தனர். அதனைத் தொடர்ந்து நாங்கள் எட்டையாபுரம் காவல் துறையிடம் புகார் அளித்ததுடன் அவர்கள் எங்களுக்கு வந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் அவர்களும் முகாமிற்குள் வந்து சமாதானம் செய்தனர்.

மறுநாள் இப்பிரச்சனை தொடர்ச்சியாக எட்டையாபுரம் காவல்துறை உதவி ஆய்வாளர் மாதவராஜன் அவர்கள் அருகிலுள்ள ஊர் பொதுமக்களுக்கு சார்பாக அவருடன் சேர்ந்து எங்களை தகாத வார்த்தைகளை திட்டி எங்கள் மீது வழக்கு தொடர்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். சமாதான முறையில் பிரச்சினையை பேசி தீர்க்க வந்த காவல்துறை உதவி ஆய்வாளர் மாதவராஜ் அவர்கள் வந்து மிரட்டல் விடுத்திருக்கும் செயல்முறைகள் எங்களுக்கு மிகுந்த பயத்தையும் மனவேதனையையும் கொடுத்துள்ளது.

எனவே அருகில் உள்ள ஊர் பொதுமக்களிடம் இருந்து பிரச்சனைகள் இல்லாதவாறு பாதுகாப்பினை கொடுத்தும், எங்கள் முகாமினை சுற்றி தடுப்பு வேலி அமைத்துக் கொடுத்து எங்களுக்கு வெளி போக்குவரத்தில் இருந்தும் பாதுகாப்பினை அளித்தும் தருமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.