தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் அமைந்துள்ள தருவைகுளம் மிக்கேல் அதிதூதர் ஆலய வருடாந்திர திருவிழா கடந்த சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.

இந்நிகழ்வில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பேரருட்தந்தை டோமினிக் அவர்கள் தலைமையில், மேதகு மேனாள் ஆயர் ஜீடு பால்ராஜ் (பாளை மறைமாவட்டம்) திருக் கொடியேற்றி திருவிழாவை சிறப்பித்தார். அருட்தந்தை ராபின் (பாளை மறைமாவட்டம்), அருட்தந்தை சந்தீஸ்டன் (புதியம்புத்தூர் பங்குத்தந்தை) ஆகியோர் திருப்பலியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருவிழாவின் போது தினமும் காலை திருப்பவணி, திருப்பலி நடைபெற்று, மாலையில் ஜெபமாலை மற்றும் மாலை ஆராதனை நடைபெற்றன.

முக்கிய நிகழ்வுகள்:

8ஆம் திருவிழா (27.09.2025, சனிக்கிழமை): நற்கருணை பவனி பேரருட்தந்தை சகாய ஜோசப் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி அருட்தந்தை அந்தோணி பாக்கியம் (அருப்புக்கோட்டை பங்குத்தந்தை) மறைஉரையாற்றினார். அருட்தந்தை பிரடின் (மதுரை அமலகம் பொருளாளர்) முன்னிலை வகித்தார்.

9ஆம் திருவிழா (28.09.2025, ஞாயிறு): பெருவிழா சிறப்பு மாலை ஆராதனையில் மேதகு ஆயர் ஸ்டீபன் அந்தோணி (தூத்துக்குடி மறைமாவட்டம்) தலைமை தாங்கி மறைஉரையாற்றினார். அருட்தந்தை தீபக்சிங் ரொசேரியன் (பெங்களூரு துறவற சபை), அருட்தந்தை விஷால் (மணப்பாக்கம் உதவி பங்குத்தந்தை) முன்னிலை வகித்தனர்.

10ஆம் திருவிழா (29.09.2025, திங்கள்): அதிகாலை 4 மணிக்கு தேரடி திருப்பலி அருட்தந்தை மரிய அரசு (எம்.சவேரியார்புரம் பங்குத்தந்தை) தலைமையில் நடைபெற்றது. அருட்தந்தை ஞானப்பிரகாசம் (பல்லடம் பங்குத்தந்தை) மறைஉரையாற்றினார். பின்னர் பக்தர்கள் பங்கேற்ற தேர் பவனி சிறப்பாக நடைபெற்றது.

திருவிழா நிகழ்வுகள் அனைத்தும் பங்குத்தந்தை எஸ். வின்சென்ட் அடிகளார், உதவி பங்குத்தந்தை விவேக், கட்டளைகாரர்கள், அருட்சகோதரிகள், இறை மக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடத்தப்பட்டன.