தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் கப்பல் கட்டும் விரிவாக்கத் தளம் அமைக்கப்பட இருப்பது தொடர்பாக அப்பகுதியில் வாழ்ந்து வரும் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தீவிர எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

முதலில் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து சுதந்திர தின கிராமசபை கூட்டத்தில் முள்ளக்காடு கிராம மக்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்கள் சார்பில் எல்.ஆர். சிவாகர் முன்மொழிந்த சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உப்பளங்களை அகற்றிவிட்டு கப்பல் கட்டும் தளம் அமைக்கக் கூடாது என ஏராளமானோர் கையெழுத்திட்டனர்.

இதனைத் தொடர்ந்து உற்பத்தியாளர்கள், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரினர். அதேபோல் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் மத்திய கப்பல் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோரையும் நேரில் சந்தித்து உப்பளத் தொழிலை பாதுகாக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்த கட்டப் போராட்டத் திட்டங்கள் குறித்து உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மந்திரமூர்த்தி, சேகர், பொன்ராஜ், சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், ராஜபாண்டியன், பாலசுப்பிரமணியன், சிவாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் உப்பளத் தொழிலாளர் தொழிற்சங்கம் (CITU) சார்பில் மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து, பொன்ராஜ், பரமசிவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், உப்பளங்களை அகற்றாமல் கப்பல் கட்டும் தளம் அமைக்க வேண்டும் என்றும், உப்பளத் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, வரும் அக்டோபர் 18 ஆம் தேதி உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் தொழிற்சங்கங்கள் சார்பில் தெருமுனைப் பிரச்சாரமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் நடைபெறவுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டம் அரசின் கவனத்தை ஈர்க்குமா என்பது தற்போது தூத்துக்குடி முழுவதும் பேசுபொருளாகி உள்ளது.