தமிழக சோசலிஸ்ட் தொழிற்சங்க பேரவை மாநில குழு சார்பில் இன்று காலை தூத்துக்குடி விவிடி சிக்னல் பேருந்து நிறுத்தம் அருகில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர் அண்ணன் சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணி, மாவட்ட துணைச் செயலாளர் மாயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் யாக் கோபு செல்வராஜ் வரவேற்புரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ம. கணேசன், சட்ட ஆலோசகர் செந். அர்ஜீன், மதிமுக மாநில வெளியீட்டு அணி செயலாளர் நக்கீரன், மதிமுக மாநகரச் செயலாளர் முருகபூபதி ஆகியோர் கலந்து கொண்டு தொழிலாளர் நலனை வலியுறுத்தி உரையாற்றினர். மாவட்ட துணைத் தலைவர் மகேஷ் நன்றியுரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசும் போக்குவரத்து கழக நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து,

போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் டிக்கெட் கேன்வாசர் தொழிலாளர்களுக்கு கருணை அடிப்படையில் ஊதிய உயர்வு மற்றும் அடையாள அட்டை வழங்க வேண்டும்,

தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ள புதிய தொழிற்சாலைகளில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்,

பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்,

தனியார் பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துநர் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியச் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்,

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையிலிருந்து நிரந்தரப் பணியில் அமர்த்த வேண்டும்,

உப்பள தொழிலாளர்களுக்கு நல வாரிய நன்மைகள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக சோசலிஸ்ட் தொழிற்சங்க பேரவை மாநில குழுவின் நிர்வாகிகள் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் பெருந்தொகையான தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.