தூத்துக்குடி வல்லநாடு அருகே உள்ள கிள்ளிக்குளம் வ.உ. சிதம்பரனார் வேளாண்மை கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் பார்த்தீனியம் (விஷப்பூண்டு) போன்ற ஆபத்தான கொடிமரங்களை அகற்றும் பணி உற்சாகமாக நடைபெற்றது.

இப்பணியை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் புவனேஸ்வரி தலைமையேற்று மாணவ–மாணவிகளுடன் இணைந்து மேற்கொண்டார். பின்னர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய அவர், பார்த்தீனியம் மனிதர்களில் தோல் அழற்சி, ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துவதுடன், கால்நடைகளின் ஆரோக்கியத்துக்கும், பால் உற்பத்தி தரத்துக்கும் தீங்கு விளைவிப்பதாக கூறினார்.

மேலும், இந்த செடி வேகமாக பரவி பிற தாவர வளர்ச்சியை தடைசெய்வதால், தொடக்கத்திலேயே அகற்றுவது முக்கியம் என்றும், 1 லிட்டர் தண்ணீரில் 4 கிராம் அட்ரசின் அல்லது 8 கிராம் 2,4-டி கலந்து தெளிப்பதும், மாற்று முறையாக 1 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் உப்பு கலந்து தெளிப்பதும் பயனுள்ளதாக இருக்கும் என விளக்கினார்.

மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட இந்த பணி, கிராமப்புற சூழலுக்கு சுத்தமும் பாதுகாப்பும் அளிப்பதோடு, இளம் தலைமுறையில் சூழல் பொறுப்பு உணர்வையும் வளர்த்தது.