தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் தண்ணீர் தேக்கம் ஏற்படாத வகையில் அரசுத்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பு செய்து வருவதாகவும், துரித நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

புஷ்பாநகர், முல்லைநகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணிகளை நேரில் ஆய்வு செய்த அவர், தொடர்ந்து பெய்யும் மழையால் கதிர்வேல் நகர், தபால் தந்தி காலனி, பாரதி நகர், புஷ்பா நகர், கோக்கூர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதை குறிப்பிட்டார்.

இந்த இடங்களில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், துறைமுக தீயணைப்பு வாகனம், நகர தீயணைப்பு வாகனம், மாநகராட்சி மின்மோட்டார்கள் என ஒருங்கிணைந்த முறையில் பணிகள் நடைபெறுவதாகவும் கூறினார்.

100க்கும் மேற்பட்ட மின்மோட்டார்கள் மூலம் மழைநீர் அகற்றம் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் 75 மின்மோட்டார்களும், திமுக சார்பில் 36 மின்மோட்டார்களும் என மொத்தம் 100க்கும் மேற்பட்ட மின்மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு மழைநீர் வெளியேற்றம் வேகமாக நடைபெற்று வருகிறது எனவும், இன்னும் ஒரு வாரம் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் எந்த விதமான சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக உள்ளோம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் கண்ணன், ராமர், நாகேஸ்வரி, பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், வட்டச் செயலாளர் மந்திரகுமார், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.