பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மு கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ வீரசக்கதேவி ஆலயத்தில் கார்த்திகை மாத பௌர்ணமி பூஜை விழா நேற்று இரவு ஆன்மிக மகிழ்ச்சியுடன் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள இந்த ஆலயம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தலையாய மாவீரரான வீரபாண்டிய கட்டபொம்முவின் குலதெய்வத் திருக்கோயிலாக இருப்பதால், ஒவ்வொரு பௌர்ணமியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் சிறப்பு அம்சம் கொண்டதாகும்.

நேற்றைய பௌர்ணமி விழா மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ வீரசக்கதேவிக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை, பெண்களின் அகல்விளக்கு பூஜை, அன்னதானம் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்வுகள் இடம்பெற்றன. குறிப்பாக, கார்த்திகை மாதத்திற்கான அகல்விளக்கு பூஜையில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர். இதில் பங்கேற்ற பெண்களில் குலுக்கல் முறையில் மூவர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த பௌர்ணமி விழாவிற்கான உபயதாரர்களாக தூத்துக்குடி கட்டபொம்மன் நகர் எம். எஸ். குமார், விக்னேஷ் குமார், பாஞ்சாலங்குறிச்சி ஜோதிபாசு, ஜெயந்தி, விவேகா, பாலமுருகன், அ. குமரெட்டியாபுரம் மொட்டையசாமி, ஓம் சரவணபுரம் பொம்மு சாமி நாயக்கர், கிருஷ்ணம்மாள், கீழ பூவானி ராஜா பொம்முதுரை, மஞ்சு, தெற்கு சிலுக்கன்பட்டி பாலசுப்பிரமணியன், சுமதி, அருள்செல்வி, அய்யாச்சாமி, மகேந்திரக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது பக்திப்பணியைச் செய்தனர்.

மாவட்டம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கட்டபொம்மு கோட்டையின் தெய்வமான ஸ்ரீ வீரசக்கதேவியை தரிசித்து ஆன்மிக நிம்மதியை பெற்றுச் சென்றனர். விழா ஏற்பாடுகளை ஆலயக்குழு செயலாளர் ஆதிசங்கர், பொருளாளர் வரதராஜப்பெருமாள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

கார்த்திகை பௌர்ணமி இரவு, கட்டபொம்மு கோட்டை முழுவதும் ஆன்மிக ஒளியால் மின்னியது.