தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கணினி பட்டா வேண்டி பொதுமக்கள் மனுக்கள் வழங்கிட இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் மார்ச் 29ல் நடைபெற உள்ளது என அமைச்சர் பி.கீதாஜீவன் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கணினி பட்டா பெறுவதற்கு சிறப்பு முகாம் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெற்றது. தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற அம்முகாமில் கணினி பட்டா பெறுவதற்காக பொதுமக்கள் திரளானோர் மனு அளித்திருந்தனர். அந்த மனுக்களை ஆய்வு செய்து படிப்படியாக அவர்களுக்கு கணிணிப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மீதம் உள்ள மக்களுக்கு கணினி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க கணினி பட்டா கோரிக்கை மனுக்கள் பெற சிறப்பு முகாம் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி இரண்டாம் கட்டமாக நடைபெற உள்ளதாக மாண்புமிகு அமைச்சர் பி.கீதாஜீவன் தற்போது அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கணிணி பட்டா வேண்டி மனுக்கள் அளிக்க விரும்பும் பொதுமக்கள் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி 1ம் கேட் அருகில் உள்ள சத்திரம் தெரு அறிஞர் அண்ணா மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற உள்ள சிறப்பு முகாமிற்கு வருகை தந்து கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். அவ்வாறு மனு அளிக்க வரும் பொதுமக்கள் பத்திரம் நகல், மூலப் பத்திரம் நகல், ஆதார் நகல் மற்றும் தீர்வை ரசீது உள்ளிட்ட ஆவணங்களையும் மனுவுடன் இணைத்து அளிக்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு தகுதி பெறும் மனுக்களுக்கான கணினி பட்டாக்கள் படிப்படியாக வழங்கப்படும். தூத்துக்குடி மாநகரப் பகுதி பொதுமக்கள் இரண்டாம் கட்டமாக நடைபெற உள்ள இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் கணினி பட்டா கோரிக்கை மனுக்களை அனைத்து வேலை நாட்களிலும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலும் வழங்கலாம் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.  ஏற்கனவே கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் மனு அளித்தவர்கள் இந்த இரண்டாம் கட்ட முகாமில் மனு அளிக்கத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.