திராவிடத்தின் எழுச்சி தமிழ்நாட்டின் வளர்ச்சி என்ற தலைப்பில் ஆதித்தமிழர் கட்சி சார்பில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைபெற்று வரும் சமூக நீதி பயணம் கோவில்பட்டியை வந்தடைந்தது.

கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நம்பிராஜ் பாண்டியன் தலைமை வகிக்க, தென்மண்டல ஊடகப் பிரிவு செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். கழுகுமலை குமரேசன் பகுதியிலிருந்து தொடங்கி மந்திதோப்பு, அறிஞர் அண்ணா நகர், ஸ்டாலின் காலனி, கரிசல்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஊர்வலமாக பயணம் நடைபெற்றது.

திறந்த வேனில் உரையாற்றிய ஆதித்தமிழர் கட்சி நிறுவனத்தலைவர் ஜக்கையன் கூறியதாவது:
“மனிதர்களை உயர்வு – தாழ்வு எனப் பிரிக்காமல் சமமாகக் காண்பதே திராவிட சிந்தனை. அனைத்து சமுதாயத்தவரும் ஒற்றுமையுடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கு திமுக ஆட்சி தொடர வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு வழங்க வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன் உள்ளிட்ட ஆதித்தமிழர் கட்சி மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.