தூத்துக்குடி மாவட்டத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்களின் தலைமையில் நடந்தது.

தமிழ்நாடு காவல்துறையின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் இக்கூட்டத்தில், காவல் நிலையங்களில் முன்பே புகார் அளித்த 5 பேரும், புதியதாக மனு அளிக்க வந்த 56 பேரும் கலந்து கொண்டனர். மொத்தம் 61 மனுதாரர்கள் இன்று தங்கள் பிரச்சினைகளை நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முன்வைத்தனர்.

மக்கள் முன்வைத்த ஒவ்வொரு குறையையும் கவனத்துடன் கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உடனடி விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

புதன்கிழமைகளில் நடைபெறும் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில், காவல் நிலையங்களில் வழங்கிய புகார் தொடர்பான விசாரணையில் திருப்தி அடையாதவர்கள் நேரடியாக மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வந்து தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.