இன்று (03/12/2025) நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி., ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட 5 இந்திய தொழிலாளர்களை மீட்டு வர மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீவிரக் கோரிக்கை முன்வைத்தார்.

தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள், கடந்த ஆறு மாதங்களாக மாலியில் உள்ள ஒரு தனியார் மின் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இதற்கிடையில், 6 நவம்பர் 2025 அன்று அவர்கள் தங்கியிருந்த முகாமை குறிவைத்து வந்த பயங்கரவாதிகள் தொழிலாளர்களை கடத்திச் சென்றனர்.

கடத்தப்பட்ட தொழிலாளர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை என்பதால், அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த பதட்டத்திலும் துயரத்திலும் உள்ளனர். அவர்கள் உயிருடன் உள்ளார்களா, தற்போது எந்த நிலையில் உள்ளனர் என்பதையும் அறிய முடியாமல் தவிக்கின்றனர் என்று கனிமொழி தெரிவித்தார்.

“இந்த ஐந்து தொழிலாளர்களையும் பாதுகாப்பாக மீட்டு, இந்தியாவிற்கும், அவர்களின் குடும்பத்தினரிடமும் கொண்டு வர மத்திய அரசு அனைத்து திறன் வாய்ந்த நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.